
பழநி: பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை காண குலுக்கல் முறையில் 2,000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஜன.27-ம் தேதி காலை 8 முதல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை நேரில் காண 6,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதில் 2,000 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதையடுத்து, கடந்த 3 நாட்களாக இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் பணி நடந்தது. 60,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்தனர். நேற்று மாலை கணினி மூலம் குலுக்கல் முறையில் 2,000 பக்தர்களை தேர்வு செய்யும் பணி நடந்தது. அறங்காவலர் குழு உறுப்பினர் ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.
உறுப்பினர் சுப்பிரமணி, கோயில் இணை ஆணையர் நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு தகவல் அனுப்பப்பட்டது. அவர்கள் ஜன.23, 24-ம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை அடையாளச் சான்று நகலுடன் வேலவன் விடுதியில் கும்பாபிஷேகத்தைக் காண்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.