
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடந்த சீன புத்தாண்டு கொண்டாடத்தின் போது 10 பேரை சுட்டுக் கொன்ற 72 வயது முதியவர், போலீஸ் துரத்திச் சென்ற போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே மாண்ட்ரே பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபருக்கு சொந்தமான ஓட்டல் செயல்படுகிறது. அந்த ஓட்டலில் சீன புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர், அதிநவீன துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்து கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து தாக்குதல் நடத்திய மர்ம நபரை தேடினர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அவர் யார், எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து எவ்வித தகவலும் தெரியவில்லை. இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்ட்ரே பார்க் நகரம் முழுவதும் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி, தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிஃப் ராபர்ட் லூனா கூறுகையில், ‘ஓட்டலில் 10 பேரை சுட்டுக் கொன்று விட்டு வேனில் தப்பியோடிய குற்றவாளியை போலீஸ் படை துரத்தியது. அந்த நேரத்தில் அவன் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர் விசாரணையில், 72 வயது முதியவரான ஹூ கேன் டிரான் என்பது தெரிய வந்துள்ளது. அவன், 10 பேரை சுட்டுக் கொன்றதற்கான காரணம் குறித்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.