
டாவோஸ்: நடப்பாண்டில் உலக அளவிலான பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலகப் பொருளாதார அமைப்பு தெரிவித்துள்ளது. விலைவாசி உயர்வு, குறைந்த அளவிலான வளர்ச்சி, கூடுதல் கடன், அதிகளவிலான சுற்றுச்சூழல் மாறுபாடு ஆகியவற்றினால் முதலீடுகள் தேக்கமடைந்துள்ளதால், உலக பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக உலக பொருளாதார அமைப்பின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உலக சந்தையில் செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை முதலீட்டாளர்கள் எடுத்து வருவதால், நடப்பாண்டில் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருண்ட நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது ஐரோப்பிய நாடுகளை பொருத்தவரை மோசமாக அல்லது மிக மோசமாகவும், அமெரிக்காவில் 91% வரை மோசமாக அல்லது மிக மோசமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம், சீனா போன்ற நாடுகளுக்கான உற்பத்தி விநியோகத்தை பன்முகப்படுத்தினால் இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் பயனடைய வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார அமைப்பின் மூத்த பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.