
மார்கழியின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுவது போல, ஒவ்வொரு மாதமும் வருகிற ஏகாதசியும் ரொம்பவே விசேஷம். அந்த வகையில் இன்று தை மாத ஏகாதசி. தை மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. இன்று 18.01.2023 புதன்கிழமை சர்வ ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபடுவது நல்லது. விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். இதேபோல், ஏகாதசி நாளில் இருந்து எவருக்கேனும் உணவு வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரக்கூடியது. வீட்டில் புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து பெருமாளை வணங்கிவிட்டு, நைவேத்தியத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குவது வாழ்வில் வளம் சேர்க்கும் என்பது நம்பிக்கை.
ஏகாதசி விரதத்திற்கான ஐதீக நம்பிக்கை: ( புராணக்கதை)
திருப்பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க, தேவர்களும் அசுரர்களும் அயராது பாடுபட்டனர். அப்போது ஏகாதசித் திருநாளில் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. எனவேதான், ஏகாதசியன்று விரதம் அனுஷ்டிப்படுகிறது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால்,நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் என்பது ஐதீகம்.
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜென்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்ற தர்மசாஸ்திரம் கூறுகிறது.
ஏகாதசி வழிபடும் முறை
1. ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வருகின்றன. ஓராண்டில் மொத்தம் 25 ஏகாதசிகள்வ ரும். ஏகாதசி திருநாளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகளை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும். அன்று முழுவதும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்படும்போது மட்டும் தண்ணீர் குடிக்கலாம்.
2. உடல் நலம் குறைவாக இருப்பவர்கள், சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை மட்டும் சாப்பிடலாம். விரதத்தை கடைபிடிக்கும்போது குளிர்ந்த நீர் குடிக்கத் தடையில்லை.
3. துளசி இலை சாப்பிடலாம். உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசி உதவியாக இருக்கும். விரதமிருப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிற்றைச் சுத்தமாக்குகிறது.
4. ஏகாதசி நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ, விஷ்ணு சஹஸ்ரநாமத்தையோ உச்சரித்து பெருமாளை வழிபடலாம்.
5. மேலும் நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்தால் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
6. முடிந்தால், இன்று புளியோதரை நைவேத்தியம் செய்து, பசித்திருப்போருக்கு வழங்குங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலும் உங்களுக்குப் பிடித்தமான உறவுக்காரர்கள் நண்பர்கள் என யார் இருக்கிறார்கள்களோ அந்த எண்ணிக்கையிலும் உணவுப் பொட்டலம் வழங்குதல் பாவங்களை போக்கும்.
ஏகாதசி விரத பலன்கள்
1. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம். இன்று விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
2. வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை’ என்பது ஆன்றோர் வாக்கு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: