
டெல்லி: தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக கியூநெட் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை முடிவில் டுமாற் 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக சுமார் ரூ.90 கோடி வரை முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு ஹாங்காங்கை சேர்ந்த Qnet என்ற நிறுவனம், இந்தியாவில் vihaan direct selling என்ற நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் இருந்து எம்.எல்.எம். முறைப்படி பணத்தை வசூல் செய்து தங்க காசு தருவதாக கூறி மிக பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்டது. இதில் சுமார் 20,000 பேர் ஆயிரம் கோடி ரூபாயை இழந்ததாக கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு அமலாக்கத்துறை இந்த வழக்கை கையில் எடுத்தது. அப்போதே இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அப்போதே சுமார் ரூ.150 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், தொடர் நிகழ்வாக 2017-ம் ஆண்டு சோதனை நடத்தப்பட்டது. தற்போது 3-வது முறையாக நேற்று இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் 36 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதன் மூலமாக சுமார் ரூ.90 கோடிக்கும் அதிகமான பணம் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.