
இத்தொடரில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில், 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிடும். கடைசிப் போட்டி முக்கியமானது கிடையாது. அப்படி இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றும் பட்சத்தில், மூன்றாவது போட்டியில் இருந்து ரோஹித், கோலி இருவரும் விலகிவிடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மூன்றாவது போட்டியில் இருந்து விலகி, அடுத்து பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக, இருவரும் ரஞ்சிக் கோப்பை தொடரில் விளையாடுவார்கள் எனக் கூறப்படுகிறது.
ஏன் இந்த முடிவு?
சமீபத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக செயல்படவில்லை. இவர் தற்போது ஒருநாள், டி20 தொடர்களில் நல்ல பார்மில் இருப்பதால், அதற்குமுன் ரஞ்சிக் கோப்பை தொடரில் களமிறங்கும்பட்சத்தில், கோலி டெஸ்டிலும் முழு பார்முக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி கோலி பார்முக்கு திரும்பினால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரித்து வருகிறது.
ரோஹித்தும்:
ரோஹித் ஷர்மாவும் சமீப காலமாக டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. இவரும் ரஞ்சிக் கோப்பை போட்டியில் பங்கேற்றால், அது ஓரளவுக்கு உதவிகரமாக இருக்கும். மேலும், இவர்களுடன் ஜடேஜாவும் 24ஆம் தேதி முதல், ரஞ்சிக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட வாய்ப்புகள் உள்ளன.
பும்ரா:
முதுகு வலிப் பிரச்சினையில் இருந்து விடுபட்டுள்ள பும்ராவையும் ஒரு ரஞ்சிக் கோப்பை இன்னிங்ஸில் பந்துவீச வைக்க பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பலமிக்க ஆஸ்திரேலிய அணி:
ஆஸ்திரேலிய அணி சமீப காலமாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது. அனைத்து பேட்டர்களும் மாறிமாறி சதமடித்து வருகிறார்கள். மேலும், பௌலர்கள் அனைவரும் தரமானவர்களாக உள்ளனர். இந்தியாவில் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளதால், 4 ஸ்பின்னர்கள் வரை அந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த 4 ஸ்பின்னர்களும் சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசி நல்ல பார்மில் இருப்பதால், நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 24ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 27, 29 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.