
கிருஷ்ணகிரி: ஜெகதேவி ஸ்ரீபசவேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாட்களாக பல்வேறு யாக சாலை பூஜைகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 8 மணிக்கு 3-ம் கால யாக பூஜை, கணபதி பூஜை, வேதபாராயணம், நாடி சந்தானம், பிராண பிரதிஷ்டை, சிறப்பு ஹோமங்கள், கலசம் புறப்பாடு நடந்தது.
காலை 9.30 மணிக்கு கோயிலில் கோபுர கலசத்துக்குச் சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பசவேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. விழாவில், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.