
புதுடெல்லி: 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் கனிம 9.7 சதவீதம் அதிகரித்ததாக மத்திய சுரங்கங்கள் துறை உற்பத்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்: கடந்த நவம்பர் மாத கனிம உற்பத்தி குறியீடு 105.8 ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் அதே மாதத்துடன் ஒப்பிடுகையில், 9.7% அதிகமாகும். 2022-23 ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் முந்தைய ஆண்டை விட 4.7% வளர்ச்சி காணப்பட்டது.
நவம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 761 லட்சம் டன்னாக இருந்தது. பழுப்பு நிலக்கரி 32 லட்சம் டன்னாக இருந்தது. இயற்கை வாயு 2,779 மில்லி கன மீட்டர். கச்சா பெட்ரோலியம் 24 லட்சம் டன்னாகவும், பாக்சைட் 2228 ஆயிரம் டன்னாகவும் இருந்தது.
குரோமைட் 243 ஆயிரம் டன்னாகவும், தங்கம் 132 கிலோவாகவும், இரும்பு தாது 231 லட்சம் டன்னாகவும், ஈயம் 30 ஆயிரம் டன்னாகவும் இருந்தன. மாங்கனீஷ் தாது 274 ஆயிரம் டன்னாகவும், துத்தநாகம் 133 ஆயிரம் டன்னாகவும், சுண்ணாம்பு கல் 330 லட்சம் டன்னாகவும், வைரம் 28 கேரட்டும், மேக்னிசைட் 9 ஆயிரம் டன்னாகவும் இருந்தன.
நவம்பர் மாதத்தில் முந்தைய ஆண்டை விட, வைரம் 87 சதவீதமும், பாக்சைட் 30 சதவீதமும், இரும்பு தாது 19 சதவீதமும், நிலக்கரி 12 சதவீதமும், சுண்ணாம்பு கல் 8.6 சதவீதமும், அதிகரித்துள்ளது. பெட்ரோலியம், இயற்கை வாயு, பழுப்பு நிலக்கரி, ஈயம், செம்பு, தங்கம், குரோமைட் ஆகியவை முந்தைய ஆண்டு நவம்பர் மாதத்தை விட உற்பத்தி குறைந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.