
புபனீஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் 15-வது உலகக் கோப்பை (ஆண்கள்) ஹாக்கியினை காணவும், அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம் சென்றுள்ளார். உலக நாடுகளில் 16 நாடுகள் பங்கேற்கும் 15-வது உலகக் கோப்பை (ஆண்கள்) ஹாக்கி போட்டியானது ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய இடங்களில் 13.01.2023 முதல் 29.01.2023 வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளைக் காணவும், ஒடிசா மாநிலத்தில் உள்ள விளையாட்டு அரங்கங்களின் கட்டமைப்புகளை பார்வையிடவும் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 18.01.2023 அன்று ஒடிசா மாநிலம் சென்றார். அமைச்சர் ஹாக்கி இந்தியா பொருளாளர் சேகர் மனோகரன், ஹாக்கி இந்தியா செயல் இயக்குநர் கமாண்டர் ஸ்ரீ வத்ஸா மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் புவனேஸ்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர். ஒடிசா மாநிலத்தின் உணவுத் துறை அமைச்சர் அட்னு சபயாசச்சி நாயக், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப. கார்த்திகேயன், ஒடிசா மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் மதிவதனன் ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (19.01.2023) புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு அரங்கில் கால்பந்து, ஹாக்கி, தடகளம், நீச்சல் குளம் மற்றும் துப்பாக்கி சுடும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார். பின்னர், ஒடிசா மாநில அமைச்சர் துஷார்கண்டி பெகரா விளையாட்டுத்துறை சிறப்பு செயலாளர் வினில் கிருஷ்ணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வி.கலாநிதி வீராசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் கா.ப கார்த்திகேயன் மற்றும் ஒடிசா மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.