
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 101 (85), சுப்மன் கில் 112 (78) இருவரும் சிறந்த துவக்கத்தை தந்தார்கள். அடுத்து, ஹார்திக் பாண்டியா 54 (38) அரை சதம் கடந்தார். மேலும், விராட் கோலி 36 (27), ஷர்தூல் தாகூர் 25 (17) போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 385/9 ரன்களை குவித்து அசத்தியது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் டிவோன் கான்வே 138 (100) சிறப்பாக விளையாடி அசத்தினார். அடுத்து ஹென்ட்ரி நிகோலஸ் 42 (40), சாண்ட்னர் 34 (29), பிரெஸ்வெல் 26 (22) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் பின் ஆலன் 0 (2), டாம் லதாம் 0 (1) ஆகியோர் டக் அவுட் ஆனதுதான், அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதியில், நியூசிலாந்து அணி 41.2 ஓவர்லயில் 295/10 ரன்களை மட்டும் சேர்த்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
தோல்விக்கு முக்கிய காரணம்:
நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 184/2 ரன்களை சேர்த்து, வலுவான நிலையில்தான் இருந்தது. இப்போது பனுவீசிய ஷர்தூல் தாகூர் மிட்செல் 24 (31), டாம் லதாம் 0 (1) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இதனால், நியூசிலாந்து அணி 184/4 என திடீரென்று திணற ஆரம்பித்தது.
ரோஹித் ஷர்மா பேட்டி:
இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து அணி 4ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இது குறித்துப் பேசிய ரோஹித் ஷர்மா, ”கடந்த 6 ஒருநாள் போட்டிகளிலும் நாங்கள் மிகச்சிறப்பாக செயல்படுவோம் என நினைக்கிறேன். பெரிய தவறுகள் எதையும் செய்யவில்லை. தொடர்ச்சியாக அனைவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் வெற்றிகளுக்கு முக்கிய காரணம். சிராஜ், ஷமி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்தோம். அவர்களுக்கு மாற்றாக வந்த உம்ரான், சஹல் ஆகியோர் அபாரமாக செயல்பட்டனர்” எனக் கூறினார்.
மேஜிக் மேன்:
மேலும் பேசிய அவர், ”இக்கட்டான நிலையில், பெரிய பார்ட்னர்ஷிப்களை பிரிப்பதில் ஷர்தூல் தாகூர் சிறப்பாக செயல்படுகிறார். இதனை, பலமுறை செய்து காட்டியிருக்கிறார். மக்கள் இவரை மேஜிக் மேன் என அழைக்கிறார்கள். உண்மையில், அப்படித்தான் செயல்படுகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டு அசத்துகிறார். நம்பர் 1 இடம் பற்றி நாங்கள் நினைத்துகூட பார்க்கவில்லை. எங்களது இலக்கு, சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான்” எனக் கூறினார்.