
சபரிமலை ஐயப்பன் கோவில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் (sabarimala ayyappa temple) நடப்பு ஆண்டிற்கான மண்டலம் மற்றும் மகரபூஜை சீசன் நேற்றுடன் (ஜனவரி 19) நிறைவடைந்தது. இதையடுத்து இன்று (ஜனவரி 20) காலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது.
நிறைவடைந்தது ஐயப்ப சீசன் :
2022 ஆம் ஆண்டு ஆண்டிற்கான மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறக்கப்பட்டு, கார்த்திகை முதல் தேதி நவம்பர் 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்கள் நடைபெற்ற மண்டல பூஜை டிசம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவடைந்ததால் நடை அடைக்கப்பட்டது. மீண்டும் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது. 21 நாட்கள் மகரவிளக்கு பூஜை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
சென்னை தங்கசாலை ஏகாம்பரேஸ்வரர் கோவில் : சென்னை பஞ்சபூத தலங்கள் – நிலம்
நடை அடைப்பு வைப்பவர்கள் :

ஜனவரி 19 ஆம் தேதி நேற்று இரவு 10 மணியுடன் பக்தர்களுக்கான தரிசனம் நிறைவடைந்தது. ஜனவரி 20 ஆம் தேதியான இன்று காலை வழக்கம் போல் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் முடிந்த பிறகு, காலை 6 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடைபெற்ற குருதி வைபவத்திற்கு பிறகு மாளிகைப்புறம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. பக்தர்கள் மலையேறி வரவும் அனுமதி கிடையாது. ராணியின் வம்சாவளியை சேர்ந்த குன்னக்கட்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பூஜை செய்த பிறகு குருதி வைபவம் நடத்தப்பட்டு, நடை அடைக்கப்பட்டது.
பந்தளம் புறப்பட்ட திருவாபரணம் :

இன்று (ஜனவரி 20) காலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்ட போது பந்தளம் ராஜா குடும்பத்தினர் மட்டும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பூஜைகளுக்குப் பிறகு 18 படிகளை சாட்சியாக வைத்து, கோவில் சாவி அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, சுவாமி ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையன்று அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் அடங்கிய பெட்டிகள் பந்தள அரண்மனைக்கு மீண்டும் கொண்டு செல்லும் வைபவமும் நடைபெற்றது.