
ஜோதிடம்
ஓ-ஜெயலட்சுமி சி
சென்னை: திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை ஆட்டி வைத்த அர்த்தாஷ்டம சனி முடியப்போகிறது. புண்ணிய சனி தொடங்கப்போவதால் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும் காலம் வரப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும். பாதிப்பிற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 4 மற்றும் 5ஆம் தேதி வீட்டிற்கு அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இனி அலைச்சல்கள் இருக்காது. இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். அதே நேரத்தில் பிள்ளைகள் மீதான கவலைகள் அதிகரிக்கும்.

அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இந்த சில மாதங்களில் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்போதுதான் போட்டியான உலகில் ஜெயிக்க முடியும்.
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.
இந்த சனிப்பெயர்ச்சியால் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது.
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையில் உங்களை இயங்க வைப்பார். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இருக்காது.
பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு செய்ய வேண்டாம். மறைமுக வருமானத்தை நம்பாதீர்கள். ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிக கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிக கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.
பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணச்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல் ஏற்படும்.
சனிபகவானின் பார்வை கும்பம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அடிக்கடி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்க வேண்டாம் வயிறு வலி பிரச்சினைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி தர்பாரண்யேஸ்வரரையும் சனிபகவானையும் தரிசனம் செய்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.
ஆங்கில சுருக்கம்
சனிப்பெயர்ச்சி பலன் 2023 துலாம் ராசிக்கு, அர்த்தாஷ்டம சனி முடிந்து பூர்வ புண்ணிய சனியை ஆரம்பிக்கும். கும்ப ராசியில் சனிபகவான் ஆட்சி செய்வதால் சிறப்பாக செயல்படுகிறார். ஒரு கனவு அல்லது இலக்கை நனவாக்க இது ஒரு நல்ல நேரமாக இருக்கும், குறிப்பாக படைப்பு வழிகளில்.
கதை முதலில் வெளியிடப்பட்டது: வியாழன், ஜனவரி 19, 2023, 17:41 [IST]