
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு 2 டன் எடையில் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது.
பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொங்கல் பண்டிகையான நேற்று மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான நேற்று அதிகாலை பெருவுடையாருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
மகா தீபாராதனை: அதன்பின், காலை 9 மணிக்கு கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, முட்டைகோஸ், பூசணிக்காய், வாழைக்காய், கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா போன்ற பழங்கள், லட்டு, அதிரசம், ஜாங்கிரி, முறுக்கு என பலவகையான பதார்த்தங்கள் மற்றும் மலர்கள் வெண்ணெய் என 2 டன் எடையில் பல்வேறு பொருட்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பசுக்களுக்கு பட்டுத்துணி: இதையடுத்து நந்தியம் பெருமானுக்கு முன்பாக, 108 பசுக்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், மாலை அணிவிக்கப்பட்டு, பட்டுத் துணி போர்த்தப்பட்டு கோ பூஜை நடைபெற்றது.
விழாவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, பெரிய கோயில் சதய விழா குழுத் தலைவர் து.செல்வம், துணைத் தலைவர் சி.மேத்தா, அறநிலையத் துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் மாலை, நந்தியம் பெருமானுக்கு அணிவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், இனிப்புகள் ஆகியவை பக்தர்களுக்கு பிரமாதமாக வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.