
டெல்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும்” என்று கூறியது விவாதப் பொருளானது. அதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றும் போது அவருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். திமுக இளைஞரணி நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மறைமுகமாக விமர்சித்தார்.
இதேபோல் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை படிக்கும்போது சில பகுதிகளை சேர்த்து நீக்கியும் படித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முதலமைச்சர் ஸ்டாலின் அப்போதே தீர்மானம் இயற்றினார். தீர்மானத்தை வாசித்துக்கொண்டிருந்தபோதே ஆளுநர் பாதியில் வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைதொடர்ந்து ஆளுநர் குறித்து திமுக குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு குடியரசு தலைவர் ஆலோசனை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்கள் வரை நடைபெற்றதாகவும். இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு அரசியல் விவகாரங்கள், ஆளுநர் சர்ச்சை குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
மேலும் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, போதைப் பொருள் கடத்தல், மத மாற்றம் ஆகியவை தொடர்பாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன், அண்ணாமலை விவாதித்ததாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.