
மாண்ட்ரே பார்க்: அமெரிக்காவில் சீன புத்தாண்டின் போது நடன விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரை கொன்ற மர்ம நபர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மாண்ட்ரே பார்க் நகரின் கார்வே அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் இரவு சீன புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இங்கு சீன வம்சாவளியினருக்கு சொந்தமான நடன விடுதி ஒன்றில் 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அப்போது அங்கு அதிநவீன துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் கண் மூடித்தனமாக சுட்டார். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கடந்தாண்டு சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போதும் மாண்ட்ரே பார்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இந்நிலையில், நடன விடுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தப்பியோடிய வேனில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தெரிவித்தது.
இது குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட காவல் அதிகாரி ராபர்ட் லூனா கூறிய போது, “சம்பவ இடத்திலிருந்து சற்று தொலைவில் சந்தேகப்படும் வகையில் வேன் ஒன்று நின்றது. அந்த வேனை சுற்றி வளைத்து நெருங்கிய போது, அந்த வேனிலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. வேனை திறந்து பார்த்த போது, அங்கு ஒருவர் இறந்து கிடந்தார். அவர் 72 வயதான ஹூ கேன் டிரான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தான் கார்வே அவென்யூவில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்க வேண்டும். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்றார்.