
புதுச்சேரி: நீதிபதிகளை பரிந்துரைக்கும் கொலீஜியம் அமைப்பில் அரசின் பிரதிநிதிகளை சேர்க்குமாறு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றி வலியுறுத்தப்பட்டு இருப்பதாக ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒன்றிய அரசுக்கும், கொலீஜியம் அமைப்புக்கும் நீதிபதிகளுக்கு இடையே பிணக்கு இருப்பதாக கூறுவது தவறானது என்றார்.
கொலீஜியம் அமைப்புக்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது ஒன்றிய அரசின் நிலைப்பாடாகும். ஆனால், இதை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை கொலீஜியம் அமைப்பில் சேர்க்குமாறு அண்மையில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூகடிதம் எழுதியிருந்தார். தலைமை நீதிபதியுடன் சுமூகமாக உறவே உள்ளதாக கூறியுள்ள அவர் உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.
புதுச்சேரி உயர்நீதிமன்ற கிளை அல்லது அமர்வு அமைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதியளித்துள்ளார். இதனால், வழக்குகள் தொடர்பாக சென்னைக்கு செல்ல வேண்டியது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். நீதிமன்றங்களில் மக்களின் நேரம் விரயமாவதை தடுக்க 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வாதாடுவதுதான் சிறப்பாக இருக்கும் என்றும் அது உள்ளூர் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.